அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை சங்கு ஊதி மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் தொகுதிச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் நலவேந்தன், கட்சி நிர்வாகிகள் வீராங்கன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் இரா. விசுவநாதன், தொகுதிக்குழு உறுப்பினர் தேவசகாயம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில், புதுச்சேரி பாவாணர் நகர் பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கு குடிசை மாற்று வாரிய இடத்தில் பூங்கா அமைத்துத் தர வேண்டும், பாவாணர் நகர் பகுதியில் வேண்டும் நபர்களுக்கு தனிக் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், ஜவகர் நகர் பகுதியில் நூலகம் அமைத்துத் தர வேண்டும், அருமார்த்தபுரம் பகுதியில் இருந்து மூலக்குளம் வரை உள்ள குடிநீர் இணைப்புகளை அரசு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொகுதிக் குழு உறுப்பினர்கள் அஞ்சலிதேவி, முரளி, பிச்சவீரன்பேட்டை கிளைச் செயலாளர் எரிக் ராம்கோ, முருகானந்தம், நிர்வாகிகள் ஞானவேல், ரவி, ஜவான், அருண், பிரசன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறை அடித்து, சங்கு ஊதி கோரிக்ககைளை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.