புதுச்சேரி அருகே கடையை சூறையாடி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அருகேயுள்ள கிருமாம்பாக்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மனைவி ஜெயந்தி (50). கணவன்-மனைவி இருவரும் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே பழக்கடை நடத்தி வருகின்றனர்.
ஜெயந்தி கடையை திறந்து வைத்திருந்த போது வியாபாரத்துக்கு இடையூறாக சார்காசிமேட்டைச் சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் என்பவர் தனது ஆட்டோவை திங்கள்கிழமை நிறுத்தியுள்ளார்.
அப்போது ஜெயந்தி ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ஹானஸ்ட்ராஜ் கடையில் இருந்த பொருள்களை சூறையாடியதோடு ஜெயந்தியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹானஸ்ட்ராஜை தேடி வருகின்றனர்.