விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள் வழங்கும் விழா, விழுப்புரம் வேளாண் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்று விவசாயிகளுக்கு மானிய விலையில், டிராக்டர்கள், இடுபொருள்கள், பைப்லைன்கள் வழங்கிய மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது: பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 50 நாள்களைக் கடந்து தொடங்கியள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சிறுதானியப் பயிர்கள் செழித்து வளரும்.
இன்றைய சூழலில், குறைந்த நீரினைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.
விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம், நீர்த்தூவும் பைப் லைன்கள் அமைத்தால் குறைந்த நீரினைப் பயன்படுத்தி மக்காச்சோளம், சிறுதானியங்கள், காய்கறிகள், கரும்பு, தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். சொட்டு நீர்ப்பாசனத்தில் ஒரு ஏக்கருக்குப் பயன்படுத்தப்படும் நீரைப் பயன்படுத்தி, 3 ஏக்கர் வரை சாகுபடி செய்யலாம். இதனால், நீரின் தேவை குறைவதோடு மகசூலும் 30 முதல் 40 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சொட்டு நீர்ப்பாசன முறையை அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசு உபகரணங்களை வழங்கி அமைத்துத் தருகிறது. இது குறித்து, வேளாண் துறை அலுவலர்களை விவசாயிகள் நேரில் அணுகி பயன்பெறலாம் என்றார்.
வேளாண் துணை இயக்குநர் ராமலிங்கம், உதவி இயக்குநர் கென்னடிஜெபக்குமார், உதவிச் செயற்பொறியாளர் சுதாகர், வேளாண் அலுவலர்கள் செந்தில், ஆரோக்கியராஜ், கங்காகெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.