திருக்கோவிலூர், சங்கராபுரம் பகுதிகளில் பொது நூலகத் துறை சார்பில் இயங்கும் நூலகங்களில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.இராஜேந்திரன், கவிஞர் பெண்ணைவளவன், ஓய்வுபெற்ற அரசு அலுவலர் அ.சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் சு.செல்வம் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட நூலக அலுவலர் கே.என்.இராஜேந்திரன் பங்கேற்று புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
'நாள்தோறும் வாசிப்போம்' என்ற தலைப்பில் நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன், புரவலர் பா.கார்த்திகேயன், மருத்துவர் சந்தானம், கவிஞர் வே.ஜெயக்குமார், எழுத்தாளர் ம.விருதுராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மருத்துவர் ந.தியாகராஜன், தனியார் பள்ளித் தாளாளர் மு.பாண்டியன் ஆகியோருக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.
மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வாசகர் வட்டத் தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகிகள் அம்மு ஏ.ரவிச்சந்திரன், ச.குழந்தைவேலு, நூலகக் கொடையாளர் தா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட நூலக அலுவலர் கே.என்.இராஜேந்திரன் பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
வர்த்தகர் சங்கத் தலைவர் து.சண்முகம், செயலர் சா.அன்வர்பாட்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வாசகர் வட்டப் பொருளர் வீர.சந்திரமோகன் நன்றி கூறினார்.
சங்கராபுரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நூலகர் இரா.செழியன் தலைமை வகித்தார். புரவலர் குறிஞ்சி அரங்க.செம்பியன், தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி, புலவர் க.கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் கு.சுப்பாரெட்டி வரவேற்றார்.
விழாவில் மாவட்ட நூலக அலுவலர் கே.என்.இராஜேந்திரன் பங்கேற்று புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதேபோல, மூங்கில்துறைப்பட்டு, தேவபாண்டலம், ஆலத்தூர் ஆகிய கிளை நூலகங்களில் புத்தக தின விழா நடைபெற்றது.