செஞ்சி காந்தி பஜார் குளக்கரை அருகே உள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி, செஞ்சி நகர திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செஞ்சி தொகுதி எம்எல்ஏ செஞ்சிமஸ்தான் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
திமுக நகரச் செயலர் காஜா
நஜீர் வரவேற்றார். ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், திமுக தலைமை நிலைய தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி காந்தி பஜார் குளக்கரை அருகில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மாரியம்மன் கோயில், முருகன் கோயில், பேரூராட்சி அலுவலகம், பள்ளி வாசல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன.
மாலை 6 மணிக்கு மேல் இந்த வழியை கடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.
குறுகிய சாலையில் இரண்டு பக்கமும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பெண்கள் இந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்றவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் திமுகவினர் உள்பட பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.