விழுப்புரம் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் விலையில்லா மோட்டார் சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2015-2016-ஆம் நிதியாண்டு பொதுத் திட்டத்தின் கீழ், 42 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களும், முதுகுத் தண்டுவடம், நரம்பு உரை தேய்வு, தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில், மூன்று சக்கர நாற்காலிகளும் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று பயனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள், நாற்காலிகளை வழங்கினார்.
எம்பிக்கள் ஏழுமலை, காமராஜ், எம்எல்ஏக்கள் குமரகுரு, சக்ரபாணி, பிரபு, ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.