வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினார். செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார் வரவேற்றார்.
மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி, திண்டிவனம் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றியச் செயலர்கள் அண்ணாதுரை (வல்லம் வடக்கு), மொடையூர் துரை (வல்லம் தெற்கு)மணிமாறன் (மயிலம் வடக்கு), இராசாராம் (ஒலக்கூர் மேற்கு), திண்டிவனம் நகரச் செயலர் கபிலன், வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே.எஸ்.எம். மொக்தியார் அலி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் ராமமூர்த்தி, ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செஞ்சி நகரச் செயலாளர் காஜா நஜீர் நன்றி கூறினார்.
கூட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள முழுஅடைப்புப் போராட்டத்தை, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.