விழுப்புரத்தில் கல்லூரிப் பேராசிரியர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள வசந்தம் நகரைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(47). மயிலம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி கீதா(38). வளவனூர், அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். சனிக்கிழமை இரவு, முரளிகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு இவரது வீட்டின் வெளியே உள்ள இரும்புக் கதவின்பூட்டை திறந்த மர்ம நபர்கள், மரக்கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். அதிகாலையில் எழுந்த முரளிகிருஷ்ணன், வீட்டில் நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். திருட்டுப்போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும். இதுகுறித்து முரளிகிருஷ்ணன் தாலுகா போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வீடு முழுவதும் சுற்றி வந்தது.
கடலூரில் இருந்து வந்த விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
இதேபோல, முரளிகிருஷ்ணனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் ஜாபர் வீட்டிலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால், அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அவர்களின் திருட்டு முயற்சி தோல்வியடைந்தது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.