செஞ்சி அருகே, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்திலிருந்து இருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை இறந்தார்.
செஞ்சி வட்டம், பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. சென்னையில் வெல்டிங் வேலை செய்து அங்கேயே குடும்பம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பாஞ்சாலி (45). இவர், புதன்கிழமை பென்னகர் கிராமத்துக்குச் செல்ல, சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தார்.
செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வந்தபோது, பாஞ்சாலி இறங்குவதற்கு தயாராக எழுந்து நின்று கொண்டிருந்தார். நீதி மன்றம் எதிரே அமைக்கப்பட்ட தாற்காலிக தடுப்பு கட்டையை கடக்கும்போது, பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார்.
இதில், பாஞ்சாலி பின்பக்க வாயில் வழியாக தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.