விளைநிலத்தின் மண் வளத்தை அறிந்து அதற்கேற்ப பயிரிட்டால் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறமுடியும் என்று வேளாண் இணை இயக்குநர் செல்வராஜ் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில், கோலியனூர் வட்டம், திருவாமாத்தூரில் உலக மண்வள தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கே.செல்வராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது: விவசாயிகள் மண் வளத்தையும், மண் நலத்தையும் பேணிக்காக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் உள்ள மண்ணை, வேளாண் துறையில் உள்ள பரிசோதனை மையத்தில் வழங்கி பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும், அளவில் மட்டுமே உரங்களை இட வேண்டும். இதனால், மண்ணின் வளம் காக்கப்படும். அதிகளவு செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ற இயற்கை வழி உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் நலம் காக்கப்பட்டு, மண் வளம் பெருகி பயிர் விளைச்சலும் அதிகரிக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, திருவாமாத்தூர் பகுதி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை முடிவுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோலியனூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வே.பிரேமலதா, துணை இயக்குநர்கள் செல்வசேகர், மோகன்தாஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பா.சுரேஷ், கிரிப்கோ மண்டல மேலாளர் ராம்குமார், கள ஆய்வாளர் கதிர்வடிவேல், டேன்பெட் மண்டல மேலாளர் நாகராஜன், வட்டார வேளாண் அலுவலர்கள் செந்தில்குமார், மகாலட்சுமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.