திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கோரை ஆற்றின் தரைப்பாலத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், அதனை இம்மாத இறுதிக்குள் சீரமைக்க உத்தரவிட்டார்.
விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இடையே, தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் கோரையாற்றில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏனாதிமங்கலம்-மாரங்கியூர் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மாரங்கியூர் உள்ளிட்ட கிராம மக்கள், பையூர் மேம்பாலம் வழியாக நெடுந்தொலைவு சென்று வருகின்றனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் உடைந்த தரைப்பாலத்தை உடனே சீரமைத்துத் தர வேண்டும், நிரந்தரமாக பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், புதன்கிழமை மாரங்கியூர் பகுதி கோரையாற்று தரைப்பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டார். தரைப்பாலம் துண்டிக்கப்பட்டிருப்பதை பார்வையிட்ட ஆட்சியர், தரைப்பாலத்தை இம்மாத இறுதிக்குள் சீரமைத்து பயன்பாட்டுக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்கள் சக்திவேல், ஜோதி, வட்டாட்சியர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாமோதரன், நாராயணசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.