விழுப்புரம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (55). இவர் அதே பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார்.
சென்னை செல்வதற்காக வியாழக்கிழமை காலை விழுப்புரம் ரயில் நிலையம் வந்த இவர், வைகை விரைவு ரயிலில் ஏறி பயணித்தார். ரயில் பெட்டியில் கதவு அருகே நின்று சென்றதாகத் தெரிகிறது. ரயில் விழுப்புரத்தை அடுத்த முத்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது, இளஞ்செழியன் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, இளஞ்செழியனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.