விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில், காயமடைந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளின் எதிரேயுள்ள புளியமரத்தில், தேனீக்கள் கடந்த சில மாதங்களாக கூடு கட்டியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பள்ளி உணவு இடைவேளையின் போது, யாரோ அந்த கூட்டை கல்லால் அடித்து கலைத்ததாகக் தெரிகிறது. இதையடுத்து, தேனீக்கள் பறந்து வந்து, அந்த பகுதியில் இருந்த பள்ளி மாணவர்கள் சாத்தனூரைச் சேர்ந்த மோனிஷா(15), ஜெயந்தி(16), அமரன்(13), பொரசக்குறிச்சியைச் சேர்ந்த சத்யா (17), சங்கீதா (15), ஈயனூரைச் சேர்ந்த திவ்யா (15), உமா (17), மாளிகை மேட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் (13), எஸ்.ஒகையூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (17), பன்னீர்செல்வம் (7), கீழ்நாரியப்பனூரைச் சேர்ந்த ரங்கநாதன் (13) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். உடனே, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ஈயனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.