விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் (இரண்டாம் நிலை காவலர்) தேர்வுக்கு விண்ணப்பிக்க திரளும் இளைஞர்கள் கூட்டத்தால் அஞ்சலகங்கள் நிரம்பி வருகிறது.
தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 15 ஆயிரத்து 711 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில், காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஏராளமான இளைஞர்கள் ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று, அங்கேயே நிறைவு செய்து, ரூ.135 கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை விரைவுத் தபாலில் அனுப்பி வருகின்றனர்.
இதனால், அஞ்சலகங்களில் தினசரி கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதுகுறித்து, விழுப்புரம் அஞ்சல் அதிகாரி ஏழுமலை கூறியது: புதுவை அஞ்சலக கோட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விழுப்புரத்தில் மட்டும் புதன்கிழமை வரை (பிப்.15) 16 ஆயிரத்து 871 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் காரணமாக கூடுதலாக ஒரு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றார்.
இதேபோல, கடலூர் கோட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட அஞ்சலகங்களிலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. விண்ணப்ப விற்பனைக்கு கடைசி தேதி பிப்.22-ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆள்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், காவலர் தேர்வுக்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.