நடிகர் கமலஹாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விழுப்புரத்தில் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் மறைமுகத் தொடர்பு வைத்திருந்ததால்தான் முதல்வர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கத் தகுதியில்லாதவர்.
நடிகர் கமலஹாசன் அதிமுக அரசைப் பற்றி பேச அருகதையற்றவர். அவர் பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர். தனியார் தொலைக்காட்சியில் கமல் நடத்தும் நிகழ்ச்சி முழுவதும் அவரது ஏற்பாட்டின்படி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கப்படுகிறது. எனவே, அவர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.