செஞ்சிக்கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ரூ. 25 லட்சம் மதிப்பில் 100 நாள்களில் நடைபெறும் இப்பணியை எம்எல்ஏ செஞ்சி மஸ்தான் தொடக்கி வைத்தார் (படம்).
செஞ்சி நகரின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கும் பி.ஏரியில் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்மை காரணமாக மழை நீர் தேங்குவது இல்லை. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிப்போனது. இதனைக் கருத்தில் கொண்டு செஞ்சியில் செஞ்சிக்கோட்டை நீராதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே செஞ்சி ஈஸ்வரன் கோயில் குளம், மேலச்சேரி குளம், காசிவிஸ்வநாதர் கோயில் குளம் ஆகியவை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் செஞ்சி நகரின் மேல் புறம் உள்ள பி.ஏரியை இச் சங்கம் தூர் வார முடிவெடுத்தது.
இப்பணியை சங்கத் தலைவர் சக்திராஜன் தலைமை வகித்தார். செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
சங்கத்தின் பொருளர் பாஸ்கர், தொழிலதிபர் வி.பி.என்.கோபிநாத், வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ், திமுக ஒன்றிய செயலர் விஜயகுமார், ரங்கபூபதி கல்லூரித் தலைவர் பூபதி, அரங்க ஏழுமலை, கண்ணாயிரம், ராஜேந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் குழுவினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.