விழுப்புரம் அருகே வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே பனையபுரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(33). வல்லத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றிருந்தார்.
வீட்டில் இருந்த சிவசங்கரனின் தாயார் சாந்தகுமாரி, வீட்டைப் பூட்டிக் கொண்டு அருகே ராதாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், இரவு 9 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.50 லட்சம் இருக்கும்.
இது குறித்து விக்கிரவாண்டி போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் இளஞ்செழியன், உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விசராணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.