திருவெண்ணெய்நல்லூர் அரசு கால்நடை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக இறுதியாண்டு பயிற்சி மாணவர்கள், "ஷேடோ வெட்ஸ்' என்ற பெயரில் குழு அமைத்து, அதன் மூலம் கால்நடை மருத்துவமனைகளை சீரமைத்து, அதில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ள, கால்நடை மருத்துவ பயிற்சி மாணவர் குழுவினர், தற்போது திருவெண்ணெய்நல்லூர் அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தை சீரமைத்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இதனையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் குருவையா தலைமை வகித்தார். அரசு கால்நடை மருத்துவர்கள் கோபி, பாலாஜி, மகேந்திரன், சிவா, தியாகி, ராஜேஷ், தாமோதர், திருவெண்ணெய்நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை பயிற்சி மருத்துவ மாணவர் குழுத் தலைவர் தாமோதரச்செல்வம் வரவேற்றார். கோகுல், சண்முகப்பிரியா, சபிதாபானு, சங்கீதா உள்ளிட்ட பயிற்சி மாணவர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
முன்னதாக, குப்பைகள், செடிகொடிகளுடன் சேதமடைந்து கிடந்த கால்நடை மருத்துவமனை வளாகப் பகுதியை முகாமிட்டு சீரமைத்துள்ள மருத்துவப் பயிற்சி மாணவர்கள், தற்போது அங்கு சுத்தப்படுத்தி புங்கன், வேம்பு உள்ளிட்ட பயன்தரும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
முன்னதாக இணை இணைக்குநர் குருவய்யா மரக்கன்றுகளை நட்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் 50 மரக்கன்றுகளை ஒவ்வொருவராக நட்டு வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வீடுகளில் ஆடு, மாடுகளை எவ்வாறு வளர்ப்பது, முறையாக தீவனங்கள் வைத்து பராமரிப்பது, வறட்சி காலத்திற்கு ஏற்ற பாசிகள் மூலம் தீவனங்களை தயாரித்தல், கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படாத வகையில், தடுப்பு மருந்துகளை வழங்குதல் குறித்தும், பயிற்சி மாணவர்கள் ஆலோசனை வழங்கினர். விவசாயிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.