விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுங்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கண்ணன்(43), வாடகைக் கார் ஓட்டுநர். இவர், தனது காரில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சுமார் 40 அடி உயரத்திலிருந்து, கீழே செல்லும் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தலைகீழாக விழுந்தது. அப்போது, அந்த சாலையில் வாகனங்கள் செல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
திண்டிவனம் டிஎஸ்பி திருமால் தலைமையில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காரை மீட்டு ஓட்டுநரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.