சின்னசேலம் அருகே கார் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது உறவினர் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த மூங்கில்பாடி கிராமத்தில் உயிரிழந்து விட்டார்.
அவரது துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக 15 பேர் ஆட்டோவில் பயணம் செய்தனர். ஆட்டோவை புளிகரம்பலூரைச் சேர்ந்த ராஜவேல் (23) ஓட்டிச் சென்றார்.
துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு ஆட்டோவில் திரும்பினர். செம்பாக்குறிச்சி அருகே சென்றபோது பின்னால் வந்த கார், ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. ஆட்டோ சாலை ஓரத்தில் இருந்த ஊர் பெயர்பலகை கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில், ஆட்டோவில் இருந்த நாங்கூர் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மனைவி சபரிநாயகி (32), முருகன் (63), சிவராஜ் மனைவி சகுந்தலா (35), வாசுதேவன் மனைவி அடங்காயி (37), அம்மாசி மனைவி மதியழகி (33), சுப்பிரமணி மனைவி அன்னக்கிளி (40), சின்னசாமி மனைவி ஆண்டாள் (24), சடையன் மனைவி சுமதி (30), மூக்கன் மனைவி லதா (28), மொட்டையன் மனைவி மாணிக்கம் (60), பெரியசாமி மனைவி லட்சுமி (27), முருகன் மனைவி மீனா (34), அலமேலு (35) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனே அவர்கள் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மீனாட்சி, மதியழகி இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அவர்கள் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.