முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தின அமைதி ஊர்வலம், விழுப்புரத்தில் வியாழக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.
தினமணி நாளிதழும், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு இயக்கமும் இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை அமைதி ஊர்வலத்தை நடத்துகின்றன.
விழுப்புரம் காந்தி சிலை முன்பிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கி, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி, காந்தி வீதி, நேருஜி வீதி வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் நிறைவு பெறுகிறது.
இந்த ஊர்வலத்தை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தொடக்கி வைக்கிறார். கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக நீதி பாதுகாப்பு இயக்கத்தினர் பலர் கலந்துகொள்கின்றனர்.
அங்கு அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சமூக நீதி பாதுகாப்பு இயக்கத் தலைவர் இ.சாமிக்கண்ணு, செயலாளர் ஆர்.சந்திரன், பொருளாளர் கே.ஆர்.சின்னையா, துணைத் தலைவர் ஆர்.குபேரன், இணைச் செயலர் ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணிக்கு விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில், அப்துல் கலாமின் நோக்கங்கள், அவர்களது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.