வானூர் அருகே கல் குவாரியில் பள்ளித்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே குருவம்பேட்டைச் சேர்ந்த வடிவேல் மகன் பழனி (30). கூலித் தொழிலாளியான இவர், வானூர் அருகே எறையூர் பகுதியில் உள்ள தனியார் கல் குவாரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கல் குவாரின் மேல் நின்று பறையை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, பழனி தவறி 40 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை தொழிலாளர்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பழனியின் மனைவி சித்ரா வானூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில், வானூர் போலீஸார் குவாரி உரிமையாளர் சடையப்பன், கணக்காளர் மாயக்கண்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.