விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பெயின்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த குணேசகரன் மகன் வீரமணி (24). பெயின்டர். தந்தை இறந்த நிலையில் தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறி விட்டு, வீட்டில் இருந்து சென்றார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் இந்திரா நகர் பகுதியிலுள்ள காலிமனைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், வீரமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு மது குடிக்கச் சென்றதாகவும், அப்போது, நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகித்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த செங்கேணி மகன் குமரேசன் (23), கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் மணவாளன் (25), ஆனந்தன் மகன் ஏழுமலை (25) ஆகிய 3 பேரை கோட்டக்குப்பம் போலீஸார் புதன்கிழமை மாலை கைது செய்தனர்.