விழுப்புரம் அரசுக் கல்லூரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூலை 31) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் 2017-18 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற ஜூலை 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வில், பி.ஏ. வரலாறு, பொருளியர் பாடங்களுக்கு விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம். பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல், பி.காம். வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில், மூன்றாம் பகுதியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். பி.ஏ. தமிழுக்கு விண்ணப்பித்தவர்கள் 160 மதிப்பெண், அதற்கு மேல் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். பி.ஏ. ஆங்கிலத்துக்கு விண்ணப்பித்தவர்கள், 140 மதிப்பெண்கள், அதற்கு மேல் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
நான்காம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கல்லூரியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்னதாக பெயர்களை பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே, வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.
புதிய படிப்புகள் தொடக்கம்: அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழாண்டு புதிதாக பி.எஸ்சி. புள்ளியியல், எம்.ஏ. தமிழ், எம்.காம் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்(பொ) அம்பலவாணன் தெரிவித்தார்.