விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்சி., பி.காம். பி.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் 10-க்கும் மேற்பட்ட இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த இளநிலைப் படிப்புகளில் 2017-18-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 12 முதல் மே 25 வரை வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மொத்தம் 8,100 விண்ணப்பங்கள் விற்பனையாயின.
மே 25 மாலை வரை கல்லூரிக்கு 7 ஆயிரம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதனையடுத்து, தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 5) தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பி.ஏ. ஆங்கிலப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் (பொ) அம்பலவாணன் தெரிவித்தார்.