விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஜவுளி வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், திலகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிம் அன்சாரி (47), ஜவுளி வியாபாரி. காரில் ஊர், ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்கிறார். இவர், துணி வியாபாரம் செய்ய வானூர் பகுதிக்கு வந்தார். அப்போது, பஞ்சவடி கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு, ஒரு கடையில் டீ குடித்தார்.
பின்னர், காரை எடுக்க முயன்ற அவரிடம், அங்கு வந்த பஞ்சவடி பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அன்பு (22), பாலு (22) ஆகியோர் இங்கு எப்படி காரை நிறுத்தலாம் எனக் கூறி தகராறு செய்தனராம். அதில், தமிம் அன்சாரியை தாக்கி, கார் கண்ணாடியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிம் அன்சாரி கொடுத்த புகாரின் பேரில், 3 பேர் மீதும் வானூர் போலீஸார் வழக்குப் பதிந்து அன்பு, பாலு ஆகியோரை கைது செய்தனர்.