வளவனூர் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
வளவனூர் அருகே வி.அகரம் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). விவசாயத் தொழிலாளி. இவர், திங்கள்கிழமை காலை, தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். பகல் 11.30 மணி அளவில், இவரது வீட்டின் அருகில் செல்லும் மின் கம்பியிலிருந்து மின்பொறி ஏற்பட்டு, கூரையில் விழுந்து தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. காற்று பலமாக வீசியதால், அருகில் இருந்த கண்ணன், குமரவேல் ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அமானுல்லா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இதில், ராஜேந்திரன், கண்ணன் ஆகியோரது வீடுகள் முழுமையாகவும், குமரவேலின் வீடு பகுதி அளவும் எரிந்து சேதமடைந்தன. வீடுகளில் இருந்த ஆவணங்கள், வீட்டு உபயோகப்பொருள்கள் கருகின. வளவனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.