விழுப்புரம் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க அரசு உரிமம் வழங்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:
தினசரி பிழைப்புக்காக மணல் ஏற்றிச் செல்லும் தொழிலாளர்களின் 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை விழுப்புரம், திருக்கோவிலூர் பகுதிகளில் போலீஸார், வருவாய்த் துறையினர் பிடித்து வைத்து வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில், மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மணல் ஏற்றி லாரிகளுக்கு விற்பதும் தவறானதாகும்.
மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அரசு உரிமம் வழங்க வேண்டும். இதனால், சிறிய அளவில் வீடு கட்டும் ஏழை மக்களும், மாட்டு வண்டித் தொழிலாளர்களும் பிழைக்க முடியும். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான லாரிகளுக்கு மணல் வழங்குவதில் பொதுப்பணித் துறை திணறிவருகிறது.
தொடரும் மணல் பிரச்னை தீர்க்க, அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் மணல் குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.