சர்வதேச யோகா தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்கள், அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் 3ஆவது ஆண்டாக புதன்கிழமை (ஜூன் 21) கடைப்பிடிக்கப்பட்டது.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக நிதியுதவியுடன் மே 21 முதல் ஜூன் 20 வரை ஒரு மாத காலம் பல்வேறு தரப்பினருக்கு யோகா உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் நிறைவு நாளாக சர்வதேச யோகா தினத்தில் சிறப்பு யோகாசன நிகழ்வு, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில், யோகா மேற்கொள்வதன் சிறப்பம்சங்கள், அதனால் மனதளவில், உடலளவில் ஏற்படும் மாற்றங்கள், நன்மைகள், யோகா கலை ஆகியவை குறித்து பயிற்சியாளர்கள் எடுத்துரைத்தனர். இதில், மாணவர்கள், இளைஞர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்று 20 நிமிடம் யோகாசனம் மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, ஜான்டூயி மெட்ரிக் பள்ளி, விஆர்பி மேல்நிலைப் பள்ளி, சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஜீவன் மெட்ரிக் பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, பாரதி மெட்ரிக் பள்ளி, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, எலவனாசூர் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, ஐஎப்இடி பொறியியல் கல்லூரி, சர்வோதயா மேல்நிலைப் பள்ளி, தொழிற்பயிற்சி மாணவர்கள் என ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.
விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அனுசுயாடெய்சி எர்னஸ்ட், விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன், உலக சமுதாய சேவா சங்க விழுப்புரம் மண்டலத் தலைவர் ராமமூர்த்தி, செயலர் உதயகுமார், வேல்முருகன், பேராசிரியர்கள் கோவிந்தசாமி, தனஞ்ஜெயன், விழுப்புரம் மனவளக்கலை மன்றத் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல, ஆட்சியர் அலுவலக வளாக பூங்கா மைதானத்திலும், ரயில் நிலைய மைதானத்திலும் மாணவர்கள், சிறார்கள் யோகாசனம் மேற்கொண்டனர்.