மரக்காணம் அருகே ஊரணியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மரக்காணம் அருகே ஊரணி கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் அளவில் வேலை வழங்குவதில்லை. வேலை செய்யும் நாள்களுக்கும் உரிய நேரத்தில் கூலி வழங்குவதில்லை. இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஊரக வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி உரிய கூலி வழங்க வேண்டும். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையில்லா மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காததால், இதனைக் கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மரக்காணம் வட்டாட்சியர் மனோகரன், மரக்காணம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.