மனவளர்ச்சி குன்றிய இரு மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை வேண்டி மனு அளித்த உடனேயே, அதுகுறித்து பரிசீலித்து, அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, அடையாள அட்டை ஆகியன கோரி 503 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்து, மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில், முட்டத்தூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுலரிசி, சிலம்பரசி ஆகிய மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வேண்டி, அவர்களது தாய் கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மாத உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி.) பத்ரிநாத், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், உதவி ஆணையர் (கலால்) ராஜேந்திரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.