விழுப்புரம் அருகே 50 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் தபால் நிலையத்தை, நகரப் பகுதிக்கு மாற்ற முயற்சிப்பதைக் கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமத்தில் நீண்டகாலமாக இயங்கி வரும் துணை தபால் நிலையத்தை நகரப் பகுதிக்கு மாற்றம் செய்ய முயற்சிப்பதைக் கைவிட வேண்டும் என்று சுற்றுப் பகுதி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் புதன்கிழமை மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: கண்டமானடியில் கடந்த 1965-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிளை தபால் நிலையம், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, துணை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது.
இதன் சேவையை அத்தியூர்திருவாதி, பிடாகம், கண்டம்பாக்கம், மரகதபுரம், வழுதரெட்டி ஆகிய கிளை தபால் நிலையங்கள் உள்ளன. கண்டமானடி, அரியலூர், சித்தாத்தூர், குச்சிப்பாளையம், ரெட்டிப்பாளையம், தளவானூர், கொளத்தூர், சாலாமேடு, ஜானகிபுரம், அத்தியூர், பிடாகம், கண்டம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள், பயன்படுத்தி வருகின்றனர். சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்புத் திட்டம், செல்வ மகன் சேமிப்புத் திட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் 400-க்கும் மேற்பட்டோர் கணக்குத் தொடங்கி மாதாந்திரம் பணம் செலுத்தி வருகின்றனர். தபால் சேவைகளுடன், வேலை விண்ணப்பங்கள், மின் கட்டணம் உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இத் துணை அஞ்சலகம் இணைய தள வசதியோடு புதுப்பிக்கப்பட்டு, வங்கிகளுக்கு இணையான சேவைப் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில், திடீரென இதனை, நகரப் பகுதிக்கு மாற்றம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு, இணைய தள வசதி முழுமையாக கிடைக்கவில்லை என்று தவறானத் தகவலை காரணமாகக் கூறுகின்றனர். இதே கிராமத்தில், கூட்டுறவு வங்கி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைய வசதியோடு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கிராமப் புற சேவைகளுக்காக தொடங்கப்பட்ட இந்த துணை அஞ்சலகத்தை, நகருக்கு மாற்ற முயல்வதைக் கைவிட வேண்டும். கிராமத்தில் உள்ள பிஎஸ்என்எல் இணைப்பை பயன்படுத்தி அங்கேயே துணை அஞ்சலகத்தை செயல்படுத்த வேண்டும்என்றனர்.