கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அ.பிரபு வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பேசியதாவது: விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் தொடங்கி மரக்காணம் கடற்கரை வரை சுமார் 220 கி.மீ நீளமும் 7,217 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டதாகும். இந்த மாவட்டத்தில் சுமார் 35 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோட்டங்கள், 13 வருவாய் வட்டங்கள், 3 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 22 ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள், 1,490 வருவாய் கிராமங்கள் உள்ளன.
சின்னசேலம் பகுதியிலிருந்தோ, கல்வராயன்மலையிலிருந்தோ, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமானால் ஒரு நாளை முழுமையாக செலவிட வேண்டி உள்ளது.
இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கித் தந்தால், இந்தப் பகுதியில் இருக்கும் 11 ஒன்றியங்கள், 5 தொகுதிகள் பயன்பெறும்.
மேலும், புதிய மாவட்டத்தை உருவாக்கினால் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 வட்டங்களும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும் உள்ளடங்கியிருக்கும்.
எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிகழாண்டிலேயே கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பேசினார் எம்எல்ஏ அ.பிரபு.