உளுந்தூர்பேட்டை தனியார் பால் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு, மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தனியார் பால் உற்பத்தி நிறுவனத்தில் தொழிற் சங்கம் அமைத்ததற்காக, அங்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 94 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்துள்ள நிர்வாகத்தைக் கண்டித்தும், தொழிலாளர் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், மீண்டும் வேலை வழங்காததைக் கண்டித்தும், அத்தொழிலாளர்கள் குடும்ப நலன் கருதி மீண்டும் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மாவட்ட துணைச் செயலர்கள் ஏ.கோவிந்தராஜ், ஆ.சௌரிராஜன், பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, குப்புசாமி, ராமச்சந்திரன், வளர்மதி, வட்டச் செயலர் நிதானம், பாலசுப்பிரமணியன், நகரச் செயலர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.