விழுப்புரத்தில் தனியார் டயர் தொழிற்சாலையில் ரூ.7.14 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவன ஊழியர்கள் 6 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில், கோவையைச் சேர்ந்த தனியார் டயர் உற்பத்தி நிறுவனம் கிளை கடந்த 2014- முதல் இயங்கி வந்தது. இதில், ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனம், இடையே திருச்சி கிளையுடன் இணைக்கப்பட்டதாம்.
இந்நிறுவனத்தின் கணக்குகளை, கடந்த மே-2014 முதல் 2017-மார்ச் வரை ஆய்வு செய்தபோது, லட்சக்கணக்கான ரூபாய் அளவில், டயர் விற்பனை நடைபெற்று, மோசடி செய்யப்பட்டது தெரிய வந்ததாம்.
இதில், இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிளை மேலாளர் திருப்பூரைச் சேர்ந்த செல்லமுத்து, புதுச்சேரியைச் சேர்ந்த பெருமாள், விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், கார்த்திக், சிரில்ராஜேஷ் ஆகியோர் பொய்யான வாடிக்கையாளர்கள் பெயரில், போலியாக விற்பனை ரசீதுகள் தயாரித்து, ரூ.7.14 லட்சம் அளவில், நிறுவனத்திற்குச் சொந்தமான தொகையை மோசடி செய்துள்ளது தெரிய வந்ததாம்.
இது குறித்து, கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் கணக்காளர் செந்தில்குமார்(34) அளித்த புகாரின் பேரில், செல்லமுத்து உள்பட 6 பேர் மீது, விழுப்புரம் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் நேவிஸ்அந்தோணிரோசி, மோசடி பிரிவின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.