விழுப்புரம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பீரோ பட்டறை உரிமையாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம், கே.கே. சாலையைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் வேல்முருகன் (32). இவர், தான் வெல்டராக பணியாற்றி வந்த சாலாமேடு துரையரசன் நகரில் உள்ள இரும்பு பீரோ தயாரிக்கும் பட்டறையில் புதன்கிழமை பிற்பகல் அடித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த பீரோ பட்டறை உரிமையாளர் சாலாமேடு மணி நகரைச் சேர்ந்த முருகன் (40) என்பவரை புதன்கிழமை இரவு போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், முருகனும், வேல்முருகனும் செவ்வாய்க்கிழமை இரவு பட்டறை பகுதியில் இருவரும் அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆத்திரமடைந்த முருகன், வேல்முருகனை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து, முருகனை தாலுகா போலீஸார் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனர்.