விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரு தினங்களாக 100 டிகிரியைக் கடந்து வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. போதிய பருவமழை இன்றி கடும் வறட்சி நிலவுவதால், வெயிலின் தாக்கம் கூடுதலாக உணரப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை வெயிலின் தாக்கம் கடந்தாண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. கோடை வெயில் தாக்கம் ஏப்.15 முதல் 30 வரை தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்கியது முதல் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடைந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை சுட்டெரிக்கிறது. மாலை 5 மணி வரை சாலையில் அனல் காற்று வீசுகிறது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
விழுப்புரத்தில், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 2 மணி முதல் 5 மணி வரை சாலையில் அனல் காற்று வீசியதால், முக்கியச் சாலைகள், வீதிகள் வெறிச்சோடி இருந்தன.
வியாழக்கிழமை 105 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவானது. தொடர்ந்து, இரு தினங்களாக 105 டிகிரி அளவில் கடும் வெயிலின் தாக்கம் இருந்தது.
குளிர்வித்த திடீர் மழை
இந்த நிலையில் விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து, 15 நிமிடம் பெய்த லேசான மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது.
இதே போல, கள்ளக்குறிச்சியில் மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதே போல, திண்டிவனம், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு பகுதிகளிலும் மாலை அரை மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால், குளிர்ந்த காற்று வீசியதோடு, வறண்ட விவசாய நிலங்களில் ஆறுதல் தரும் வகையில் ஈரப்பதத்தை ஏற்படுத்தியது.