விழுப்புரம் மாவட்டத்தில் 91.81% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் 91.81 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டை விட 3.74 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் 91.81 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டை விட 3.74 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் 549 பள்ளிகளிலிருந்து தேர்வெழுதிய 47 ஆயிரத்து 145 மாணவ, மாணவிகளில் 43 ஆயிரத்து 285 பேர் தேர்ச்சி பெற்று 91.81 சதவீத தேர்ச்சியை பெற்றனர்.
மாணவிகள் 93.47%: தேர்வெழுதிய 23 ஆயிரத்து 621 மாணவிகளில் 22 ஆயிரத்து 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.47.  23 ஆயிரத்து 524 மாணவர்களில், 21 ஆயிரத்து 207 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி தவீதம் 90.15.
3.74 % கூடுதல் தேர்ச்சி: கடந்தாண்டு 47 ஆயிரத்து 546 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 41 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்று 88.75 தேர்ச்சி சதவீதத்தை விழுப்புரம் மாவட்டம் பெற்றிருந்தது. இந்தாண்டு, 91.81 சதவீதம் தேர்ச்சி கிட்டியுள்ளது. இதன் மூலம் 3.74 சதவீதம் கூடுதல் தேர்ச்சிவிகிதம் எட்டப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 28-வது இடத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கடந்த 2015ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.52 சதவீதமும், 2016 தேர்வில் அரை சதவீதம் உயர்ந்து, 88.07 சதவீதமும், இந்தாண்டு 3.74 சதவீதம் உயர்ந்து, 91.81 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமூக அறிவியலில் 2,542 பேர் சதம்: தமிழ் பாடத்தில் 94.78 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 96.25 சதவீதம் பேரும், கணிதபாடத்தில் 95.16 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 99.34 சதவீதம் பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 97.63 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
கணித பாடத்தில் 361 பேரும், அறிவியல் பாடத்தில் 513 பேரும், சமூகஅறிவியல் பாடத்தில் 2 ஆயிரத்து 542 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
தேர்ச்சியை உயர்த்த வேண்டும்: விழுப்புரம் மாவட்டம், பத்தாம் வகுப்புத் தேர்வில் கடந்த மூன்று ஆண்டுகளாக 90 சதவீதத்தை நோக்கி தேர்ச்சியில் உயர்ந்து வருகிறது. எனினும், மாநில அளவில் கடைநிலையாக 28-வது இடத்தில் நிற்கிறது. பிளஸ் 2 தேர்ச்சியிலும் பின்தங்கியுள்ளது. மாவட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்புகள் இருந்தபோதும், அதற்கு தகுந்த வகையில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்து வருகிறது.
இது குறித்து, கல்வி அதிகாரிகள் கூறுகையில், மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் அதிக அரசுப் பள்ளிகளையும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களையும் கொண்டுள்ளது. 549 பள்ளிகள் மாவட்டத்தில் உள்ளன. பிற முன்னணி பெறும் மாவட்டங்களில் 200 முதல் 400 பள்ளிகளே உள்ளன. அரசுப் பள்ளிகளும் நம்மிடம் 343 உள்ளது. பிற மாவட்டங்களில் அதிகபட்சம் 200 பள்ளிகளே உள்ளன.
இதனால், மாநில அளவில் பின்தங்கிய தோற்றம் உள்ளது. எனினும், தேர்ச்சியை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருவதாகக்
கூறினர்.

165 பள்ளிகள் முழு தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 549 பள்ளிகளில், 343 அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியை வழங்கின. 67 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 165 பள்ளிகள் முழு அளவில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com