பட்டா வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை திருநங்கைகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் 42 திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர். அப்போதிருந்த கோட்டாட்சியர் தலா 2 சென்ட் இடத்தை கொடுப்பதாக உறுதியளித்தாராம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை கோட்டாட்சியர் தி.ரா.மல்லிகாவிடம் சென்று கேட்ட போது, அந்த இடத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால்தான் பட்டா அளிக்க முடியும் என கூறினாராம்.
இதனால், அதிருப்தியடைந்த திருநங்கைகள் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணி அளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் த.ராஜராஜன், காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று வேறு இடம் தேர்வு செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததின் பேரில் திருநங்கைகள் கலைந்து சென்றனர்.