மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தைக் காண காலை முதலே பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம்
இருந்தனர்.
முன்னதாக, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
இரவு 11.30 மணிக்கு தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அங்காளம்மன் மேளதாளம் முழங்க பக்தர்களின் பலத்த கரகோஷத்தினிடையே ஊஞ்சல் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.
பின்னர், ஊஞ்சலில் அம்மன் அமர்ந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடல்களை பாடினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் தங்கள் கைகளில் எலுமிச்சை, தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். செஞ்சி டிஎஸ்பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.   விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், கோயில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பூசாரிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com