விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் சட்டம் படித்த இளைஞர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சட்டப் படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் தொழில் தொடங்கவும் மற்றும் அலுவலகம் அமைக்கவும் அரசு நிதி உதவித் தொகையாக தலா ரூ.50 ஆயிரத்தை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சட்டப் படிப்பு படித்த 83 பேருக்கு, தலா ரூ.50
ஆயிரம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம் படித்த இளைஞர்களுக்கு அரசு நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆ.அருணாசலம் மற்றும் சட்டப் படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.