விழுப்புரத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பரிசுகளையும், சான்றிதழ்களையும் திங்கள்கிழமை வழங்கினார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் விழுப்புரம், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஃபிரி ஸ்டைல், ஃபிரி ஸ்டோக், பேக் ஸ்டோக், பட்டர் ஃபிளை ஆகிய பிரிவுகளின் கீழ் 50 மீட்டர், 100 மீ, 200 மீ என தொலைவின் அடிப்படையில் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திங்கள்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.
முதல் பரிசு ரூ.1,200, இரண்டாம் பரிசு ரூ.800, மூன்றாம் பரிசு ரூ.400-ம் பரிசுத் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் பத்மநாபன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.