விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த தம்பதி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தது கண்டு அங்கு பணியில் இருந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களை தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரித்துள்ளார்.
விசாரணையில், அவர்கள் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலக ஊழியர் முருகன்(51), அவரது மனைவி சின்னப்பொண்ணு(44) என்பதும், முகையூரில் ஒரு பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியதை திரும்பச் செலுத்தாத நிலையில், அப்பெண் பணத்தைக் கேட்டு மிரட்டுவதால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தனராம்.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீது ஆட்சியரகத்திற்கு தீக்குளிக்க மண்ணெய் கேனுடன் வந்தததுடன், மண்ணெண்ணெய் கேனை பறித்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.