விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சைல்டு லைன் அமைப்பு மூலம் இந்தாண்டு ஆதரவற்று வந்த 108 குழந்தைகள் மீட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சைல்டு லைன் (1098) அமைப்பு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு, குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம், கல்வி பாதிக்கப்படும் குழந்தைகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து வெளியேறிய குழந்தைகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில், சைல்டு லைன் அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப்அலெக்ஸ், லட்சுமிபதி, ஜான்போஸ்கோ, சந்தோஷ்குமார், சுதாகர் ஆகியோர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் பவ்டா நிறுவனம், ஏஆர்எம் நிறுவனம், திருக்கோவிலூர் நம்பிக்கை மையம், செஞ்சி செக்கோவார் அறக்கட்டளை, திண்டிவனம் மதர் அறக்கட்டளை ஆகியவை சார்பில், அரசு வழிகாட்டுதலுடன், குழந்தைகள் மீட்பு மற்றும் சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சேவை மையங்கள் மூலம், கடந்தாண்டு 52 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆதரவற்ற குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைத் திருமணம் செய்விக்க முயன்ற 103 பெண் குழந்தைகளை மீட்டுள்ளோம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 20 குழந்தைகளையும், உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான 128 குழந்தைகளையும் மீட்டு காப்பங்களில் ஒப்படைத்துள்ளோம்.
மலைவாழ் பகுதிகளில் கல்வியை கைவிட்ட 115 குழந்தைகளை மீட்டு, அரசு சார்பில் அவர்களுக்கு கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பிச்சை எடுத்து திரிந்த 104 குழந்தைகளை மீட்டு, காப்பகங்கள், பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மாற்றுத் திறன் குழந்தைகள் 102 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்று வந்த 35 குழந்தைகளை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், 981 குழந்தைகளை மீட்டு, சமூக நலத்துறை உதவியுடன் நல்வாழ்வு வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பிரச்னைகள் தொடர்பாக, 1098-ல் தொடர்புகொண்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.