கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1,314 மடிக் கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்பி க.காமராஜ், எம்எல்ஏ அ.பிரபு ஆகியோர் பங்கேற்று மடிக் கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
இதில், கள்ளக்குறிச்சி அரசு பெண்கள், ஆண்கள், பெரியசிறுவத்தூர், பெருமங்களம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 62 லட்சத்து 93 ஆயிரத்து 600 மதிப்பில் 1,314 விலையில்லா மடிக் கணினிகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஒய்.அப்துல்கரீம், செயலர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை மார்க்கிரெட் வரவேற்றார்.
அதேபோல கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.பாபு, துணைத் தலைவர் சி.பால்ராஜ், செயலர் எஸ்.சர்புதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ந.ராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்பி க.காமராஜ், எம்எல்ஏ அ.பிரபு ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளியின் உடல்கல்வி இயக்குநர் ராமச்சந்திரன் செய்தார்.