கோட்டக்குப்பம் அருகே காரில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை கடத்தி வந்த புதுச்சேரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள அணிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் அங்கமுத்து தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 200 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் இருக்கும்.
இதையடுத்து, காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர், புதுச்சேரியை அடுத்த சோலை நகரைச் சேர்ந்த முரளி(23) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்திச் செல்வதும் தெரிந்தது.
மதுப் புட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து முரளியை கைது செய்தனர்.