மயிலம் காவல் நிலையத்தை, தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவிகளை அவரது உறவினராக சக்திவேல் தனது பைக்கில் திங்கள்கிழமை காலை தழுதாளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் இறக்கி விட்டுள்ளார்.
அப்போது, தழுதாளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன், சக்திவேலிடம் பள்ளிக்குள் பைக்குகள் வர அனுமதி இல்லை எனவும், இனிமேல் மாணவிகளை பள்ளிக்கு வெளியே இறக்கி விடுமாறும் கூறினாராம்.
இதற்கு சக்திவேல் எதிர்ப்புத் தெரிவித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முருகன் சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சக்திவேல் தாக்கப்பட்டதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை அப்பள்ளியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயிலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, முருகனை கைதுசெய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து வந்த திண்டிவனம் டிஎஸ்பி திருமால், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதி அளித்ததை அடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.