விழுப்புரம் அருகே ஓடையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என அடையாளம் தெரிந்தது.
விழுப்புரம் அருகே அருகே ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ஓடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில், அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். சடலத்தை விக்கிரவாண்டி போலீஸார் கைப்பற்றி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரிவில்லை. ஆனால், அவரை யாரோ தனிமையில் அழைத்து வந்து, கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட அந்த பெண், லட்சுமிபுரம் ஜம்ஜம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இக்பாலின் மனைவி மம்முதாபீவி(41) என்பது தெரிய வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போன மம்முதாபீவியை பல இடங்களில் இக்பால் தேடி வந்தார். இந்த நிலையில், லட்சுமிபுரம் ஓடையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது மனைவியாக இருக்கலாம் என விக்கிரவாண்டி போலீஸாரை இக்பால் அணுகினார். தொடர்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தைப் பார்த்து, மம்முதாபீவிதான் என்பதை அடையாளம் காண்பித்து உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து, மம்முதாபீவியை கொலை செய்தது யார் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.