புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபுட்டிகளை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை போலீஸார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அருகே அனுமந்தை சோதனைச் சாவடியில், காவல் ஆய்வாளர் ஹரிகரன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காலை 6 மணி அளவில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 1,566 புதுச்சேரி மதுப்புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும்.
காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மரக்காணம் அருகே களத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் ரமேஷ்(42) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, மதுபுட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீஸார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.