வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் செஞ்சி கிளை நூலகத்துக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆணைக் குழுவின் கீழ் இயங்கும், செஞ்சி கிளை நூலகத்தின் சார்பில்
50-ஆவது தேசிய நூலக வார விழா ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் செந்தில்பாலா வரவேற்றார். செஞ்சி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்தார். நூலகர் இரா.இராதாகிருஷ்ணன் அறிக்கை வாசித்தார். செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் செஞ்சி கிளை நூலகத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனத் தலைவர்
ஆர்.பூபதி வழங்கினார்.
பேராசிரியர் பழ.சம்பத், முனைவர் மா.சற்குணம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கவிஞர் செஞ்சி தமிழினியன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜெரால்டு மைக்கேல் ராஜசுந்தர், செஞ்சிக்கோட்டை நீராதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் வீ.சக்திராஜன், மாவட்ட மைய நூலகர் க.வேல்முருகன், செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செஞ்சி கிளை நூலகர் ஏ.பூவழகன் நன்றி கூறினார்.